இடிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் கட்டப்படாத பள்ளிக்கட்டிடத்தால் கோவில் மண்டபத்தில் படிக்கும் அவலம் அப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நான்கு கட்டிடங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் 5 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் எல்கேஜி யுகேஜி மாணவ மாணவிகள் பயின்று வந்த பள்ளிக்கட்டிடத்தை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக பழமையான கட்டிடம் சேதமடைந்துள்ளது என்று கூறி இடிக்கப்பட்டது. இதற்கு மாற்றுக் கட்டிடம் அதே இடத்தில் கட்டப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வரை கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படாமல் உள்ளது.
இதனால் இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தில் பயின்ற 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவமாணவிகள் 29 பேர்களும் , எல்கேஜி யுகேஜி மாணவ மாணவிகள் 15 பேர்கள் உட்பட 44 மாணவ மாணவிகள் தற்காலிகமாக கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் மண்டபத்திலும், ஊர் சமுதாய கூடத்திலும் பயின்று வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சார்பாக ஊராட்சி மன்றத்தலைவரிடமும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் , தேனி மாவட்ட கல்வித்துறை அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் கூறுகின்றனர்
.
மேலும் கோவிலில் நடைபெறும் விசேஷ நாட்களிலும் திருவிழா நாள்களிலும் கோவில் வளாகத்தில் படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கபடுவதாகவும், அதனால் அப்பள்ளி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் மழைக்காலங்களில் பள்ளி வளாகத்தை சுற்றி புதர்மண்டி கிடப்பதாலும் , பாம்புகளும் பூச்சிகளும் எந்த நேரமும் அக்கோவில் வளாகத்திற்குள் வந்துவிடும் என்ற அச்சத்தோடு பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். எனவே தேனி மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய பள்ளிக்கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று திம்மரசநாயக்கனூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…