சேலம்: சேலம் அருகே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி ஏழாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்தி - கௌரி என்ற தம்பதியினரின் மகன் கவேஷ்(12). இவர் கன்னங்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று கவேஷ் வழக்கம் போல பள்ளிக்குச் சென்று பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்று புத்தகப்பையை வீட்டில் வைத்துவிட்டு மீண்டும் விளையாட வெளியே சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது கன்னங்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே கவேஷ் சென்று கொண்டிருந்த பொழுது, சாலையின் ஓரமாக தோண்டப்பட்டிருந்த குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண் குவியலாக இருந்துள்ளது. அதை கடந்து செல்ல முயன்றபோது மண் சறுக்கி தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவம் இடம் வந்த கன்னங்குறிச்சி காவல்துறையினர் மாணவனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து மாணவன் உயிரிழந்த சம்பவம் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டனர்.
அப்போது ஆம்புலன்சில் வைக்கப்பட்டிருந்த மாணவனின் உடலை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து விபத்து குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…