சேலம்: தம்மம்பட்டி அருகே இன்ஸ்டாகிராம் தோழியுடன் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உடற்கூறாய்வு தாமதமானதால் ஆம்புலன்ஸ் வாகனத்தை சாலையில் நிறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள பச்சமலையில் மங்களம் அருவி உள்ளது. கோடை காலத்தில் நீரோட்டம் குறைந்ததால் இந்த அருவியில் குளிக்கவும், அங்கு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டியைச் சேர்ந்த தமீம் (23), ஜெஸ்வந்த் (23), நிசாந்த் (24) இவர்களுக்கு, முசிறி தா.பேட்டையைச் சேர்ந்த குமரவேல் மகள் ஆர்த்தி (23) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, ஊட்டியில் இருந்து நேற்று தா.பேட்டைக்கு காரில் சென்ற 3 பேரும், ஆர்த்தியை அழைத்து கொண்டு பச்சமலையில் உள்ள மங்களம் அருவிக்கு தடையை மீறி குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அருவிக்கு செல்லும் பாதையில் உள்ள தடைகளை அகற்றிவிட்டு குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மங்களம் அருவியின் தண்ணீர் விழும் தடாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரின் ஆழம் தெரியாமல் அவர்கள் குளிப்பதற்காக அருவியையொட்டி உள்ள பகுதியில் இருந்து குதித்தாகத் தெரிகிறது.
அப்போது, தமீம், ஜெஸ்வந்த் இருவரும் தண்ணீருக்குள் இருந்த பாறையில் மோதியுள்ளனர். நீச்சல் தெரியாததால் இருவரும் நீருக்குள் மூழ்கத் தொடங்கினர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிசாந்த் அவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது நிசாந்தும் தண்ணீரில் மூழ்கினார். அவர்களுடன் வந்த இன்ஸ்ட்கிராம் தோழி ஆர்த்தி நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார்.
சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த மலைவாழ் இளைஞர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்டனர். இதில் தமீம், ஜெஸ்வந்த் ஆகிய இருவரும் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய நிசாந்த்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு ஆர்த்தியுடன் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தம்மம்பட்டி போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து தமீம் மற்றும் ஜெஸ்டின் உறவினர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். அப்போது உடற்கூறாய்வு செய்ய தாமதம் ஏற்படுவதாக கூறி ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்களை அரசு மருத்துவமனை முன்பு சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்தூர் பிரதான சாலையான கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அவ்வழியே இருசக்கர வாகனத்தை செல்பவர்களை கூட அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை செய்தி எடுக்கவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு செய்தியை வெளியிடக் கூடாது என மிரட்டியுள்ளனர். மேலும் தொலைக்காட்சி செய்தியாளர் நல்லதம்பி என்பவரை தாக்கியதோடு அவரது கேமராவை சேதப்படுத்தி சட்டையையும் கிழித்துள்ளனர். இதில் காயமடைந்த நல்லதம்பி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதனிடையே செய்தியாளர் நல்லதம்பியை இறந்தவரின் உறவினர்கள் தாக்கிய் போது போலீசார் கண்டு கொள்ளாமல் இருந்தது செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…