Erode Crime news : திருப்பத்தூரை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து ஈரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைபார்த்து வருகிறார். மேலும், அருண்பாண்டியனின் தம்பி அஜித்குமார் ஈரோடு பெரியண்ணன் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அருண்பாண்டியன் அடிக்கடி குடிபோதையில் தனது தம்பி அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக அவர்களுக்கிடையே இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்துள்ளது. நேற்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் அருண்பாண்டியன் ஈரோடு மொசவண்ணா வீதியில் பணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தம்பியிடம் குடிபோதையில் இருந்த அருண்பாண்டியன் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்கள் இருவருக்கு இடையே மீண்டும் தகராறு முற்றியது.
இந்த தகராறில் ஆத்திரமடைந்த அஜித்குமார் கறி வெட்டும் கத்தியால் அண்ணனை ஓட ஓட விரட்டி வெட்டினார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அருண்பாண்டியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் விசாரணை நடத்தினார். மேலும், அருண்பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அண்ணனை கொலை செய்து தப்பி ஓடிய அஜீத்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அருண்பாண்டியனை அவரது தம்பி அஜீத்குமார் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளிலும் பதிவாகியுள்ளது. மேலும், இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…