சேலம்: இந்திய வீரர் நடராஜன் கட்டியுள்ள மைதானத்தை முன்னணி நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்துள்ளார். அதேபோல் சிறிய நகரத்தில் இருந்து சாதித்த வீரர்களில் தோனிக்கு பின் நடராஜன் தான் என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தன்னுடைய சொந்த ஊரான சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை சொந்தமாக கட்டியுள்ளார். இந்த மைதானத்தின் திறப்பு விழாவிற்கு தினேஷ் கார்த்திக், அசோக் சிகாமணி, விஸ்வநாதன், உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
இந்த மைதானத்தில் 4 பிட்ச்கள், இரண்டு பயிற்சி தடங்கள், உடற்பயிற்சி கூடம், கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் அமரக்கூடிய வகையில் கேலரியும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான வீரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தை திறந்து வைத்த இந்திய கிரிக்கெட் தினேஷ் கார்த்திக் பேசுகையில், நடராஜனின் கிரிக்கெட் பயணம் அனைவருக்கும் ஊக்கமளிக்கக் கூடிய ஒன்றாகும்.
பெரிய நகரங்களில் இருந்து ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் சின்ன ஊரில் இருந்து வந்து சாதித்தவர் தான் எம்எஸ் தோனி. அதேபோல் சேலம் சின்னப்பம்பட்டியில் இருந்து வந்து இந்திய கிரிக்கெட்டில் சாதித்தவர் நடராஜன். ஐபிஎல் தொடருக்கு பின் நடராஜன் ஏன் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்று ஹெய்டனும், ரிக்கி பாண்டிங்கும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள்.
அதுதான் நடராஜன் ஆஸ்திரேலியாவில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம். தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக ஏராளமானோர் விளையாடி இருக்கிறார்கள். நானும் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். ஆனால் எனக்கு இப்படியொரு மைதானம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதே இல்லை. என்னுடன் இருக்கும் மக்கள் என்னைவிட மிகப்பெரிய வீரர்களாக வர வேண்டும் என்ற ஆசையுடன் நடராஜன் மைதானத்தை கட்டியுள்ளார். நடராஜன் தான் பெற்றதை இந்த சமூகத்திற்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதன் சாட்சிதான் இந்த மைதானம் என்று தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…