சேலம்: தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை இரண்டே ஆண்டுகளில் முடித்து விட்டோம் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்த மன நிறைவுடன் உள்ளேன். சேலத்தில் கணக்கில் அடங்காத பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு திணறி வருகிறது. ஆனால் நிதி நெருக்கடியை கூறி, புதிய திட்டங்களை அறிவிக்காமல் இல்லை.
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் வெளிநாட்டு பயணத்தால் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வர உள்ளன. தமிழ் பண்பாட்டின் வெளிப்பாடாக, வெளிநாடுகளுக்கு சென்று முதலீடு செய்ய அழைத்தால் தான் முதலீட்டாளர்கள் ஆர்வத்தோடு வருவார்கள். முதலீடு குறித்த பயணத்தை கூட உள்நோக்கத்தோடு சிலர் விமர்சனம் செய்கின்றனர்.
மக்கள் பணியாற்றவே எனக்கு நேரம் பற்றாக்குறையாக உள்ளது. கட்டணமில்லா இலவச பஸ் பயணத்தை சேலத்தில் மட்டும் 14 கோடி முறை பெண்கள் பயன்படுத்தியுள்ளனர். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் என எனது மக்கள் பணிகளைத் தொடருவேன். சேலத்தில் மாபெரும் தொழிற்பூங்கா அமைக்க நிலம் தேர்வுக்கான பணிகள் நிறைவடைய உள்ளன.
ஜவுளி பூங்காவிற்கான கட்டுமானப்பணிகள் விரைவில் துவங்க உள்ளன. மேட்டூர் அணையில் இருந்து குறித்த நேரத்தில் நாளை தண்ணீர் திறந்து விடப்படும். நானும் டெல்டாக்காரன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தான் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து போடப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் அறிவிக்க வேண்டிய திட்டங்களை இரண்டே ஆண்டுகளில் அறிவித்து சாதித்துள்ளோம். தமிழகம் நம்பர் ஒன் மாநிலம் என பெயர் எடுப்பது தான் எனக்கு பெருமை என நான் நினைக்கிறேன் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…