நள்ளிரவில் கர்ப்பிணியை ஆட்டோவில் அழைத்து வந்த டிரைவரை மடக்கிய போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், டிரைவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் ரூ.1,500 அபராதம் வசூல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் போலீசாருக்கு பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என மூத்த அதிகாரிகளும், அரசும் அவ்வப்போது ஆலோசனை வழங்கி வந்தாலும், , சில போலீசார் பொதுமக்களிடம் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வது நடந்துகொண்டுதான் உள்ளது.
அந்த வகையில், சென்னை பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு செம்பியம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் அந்த வழியாககர்ப்பிணி மற்றும் குழந்தையை ஏற்றிக்கொண்டு ஒரு ஆட்டோ வந்துள்ளது.
ஆட்டோ வந்தது ஒன்வே என்பதால், ஆட்டோவை மடக்கிய சப் இன்ஸ்பெக்டர் பாலமுரளி என்பவர் ரூ.1,500 அபராதம் செலுத்தி விட்டு செல்லும்படி கூறியுள்ளார். அதற்கு ஆட்டோ ஓட்டுனர், இரவு நேரம் என்பதாலும் ஆட்டோவில் கர்ப்பிணி உள்ளதாலும் அவசரமாக செல்வதற்காக இந்த வழியில் வந்துவிட்டதாகவும், மன்னித்து விட்டுவிடும்படியும் கோரியுள்ளார்.
ஆனால், சப் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தொடர்ந்து அவரிடம் வாக்குவாதம் செய்ததோடு, அபராதம் செலுத்தாமல் அனுப்ப முடியாது என்று கூறியுள்ளார். இதை யாரோ வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் இந்த சம்பவம் நடந்தபோது சப் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா... கர்ப்பிணி பெண் என்றும் கூட பார்க்காமல் இவ்வாறு நடந்து கொள்கிறீர்களே" என்று பதிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…