ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வேன் கவிழ்ந்து இளம் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தியமங்கலத்தை அடுத்து உள்ள புதுக்கொத்துக்காடு பகுதியை சேர்ந்த 16 தொழிலாளர்கள் அருகே உள்ள ராஜன் நகரில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சரக்கு வேனில் சென்றுள்ளனர். சரக்கு வேனை சத்தியமங்கலத்தை சேர்ந்த சல்மான் என்பவர் ஓட்டியுள்ளார்.
விருந்து நிகழ்ச்சி முடிந்து அனைவரும் மீண்டும் அதே சரக்கு வேனில் புதுக்கொத்துக்காடு பகுதிக்கு சென்றபோது சத்தியமங்கலத்தை அடுத்த தாண்டம்பாளையம் அருகே சரக்கு வேன் நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீதும் சரக்கு வேன் மோதியது.
இதில் கவிதா என்ற 26 வயது இளம் பெண் சரக்கு வேனின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் டிரைவர் உள்ளிட்ட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையே சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…