சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற பெண்மீது தனியார் பேருந்து மோதியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தஸ்தகீர் மனைவி ஷாஷாபீ (வயது52). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மையகரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு தனியார் பேருந்து மூலம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார். பின்னர் நகரப் பேருந்து ஏறுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது, நடந்து சென்றுக் கொண்டிருந்த அவர்மீது தனியார் பேருந்து ஒன்று மோதியது. இதில், ஷாஷாபீ நிலைதடுமாறி, அந்தப் பேருந்தின் முன்சக்கரத்திற்கு சிக்கி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தைப் பார்த்த பயணிகள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த நகர போலீசார் ஷாஷாபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த விபத்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், அந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…