ஆரம்பத்தில், பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே பெற்றுத் தந்த படம் என்றால், அர்ஜூன் ரெட்டி. இந்தப் படம் தெலுங்கில் மட்டுமின்றி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெரும் வெற்றியைத் தேடித் தந்தது.
இந்நிலையில், இவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படமாக லைகர் எனும் ஆக்ஷன் திரைப்பத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படத்தின் விளம்பரப்பணியின் போது, விஜய் தேவரகொண்டா பேசியது சர்ச்சையானது. இதன் மத்தியில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தப் படம் வெளியானது. இந்தப் படமானது, சுமார் 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. பெரும் வரவேற்பை எதிர்பார்த்த இந்தப் படம், மிகவும் மோசமான விமர்சனத்தைப் பெற்றது. இதன் காரணமாக, மொத்த பட்ஜெட்டில் 30%-ஐக் கூட வசூலிக்கவில்லை. படுதோல்வியைச் சந்தித்த இந்தப் படத்தால், நடிகர் விஜய் தேவரகொண்டா கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். இந்நிலையில், இந்தப் படத்தில் வெளிநாட்டில் இருந்து ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக, புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதன் பிறகே, லைகர் படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகை சார்மி கவுர் போன்றோர்க்கு சம்மன் அனுப்பப்பட்டு தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, லைகர் பட ஹீரோவான விஜய் தேவரகொண்டாவிற்கும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
இதன் அடிப்படையிலேயே, ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா விசாரணைக்காக சென்ற போது அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இவ்வாறு தொடர்ந்து சர்ச்சைகளாக வருவது, திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…