நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பெற்ற ஜெய் பீம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக, படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருளர் சமூகத்த்தை சேர்ந்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளிக்காட்டும் வகையில், தமிழகத்தின் வடக்கு மண்டலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ஜெய் பீம்.
இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி பெற்றுத் தரும் வக்கீலாக நடிகர் சூர்யா நடித்திருந்தார். இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது. சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது.
இந்த படத்தில் சில கேரக்டர்கள் மற்றும் காட்சிகள் திரிக்கப்பட்டதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு நல்ல விமர்சனங்களை பெற்றதோடு, ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஜெய் பீம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தை தயாரித்த 2டி நிறுவனத்தின் சிஇஓ ராஜசேகர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…