இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின், இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார். தமிழக அமைச்சரவையின் 35வது அமைச்சராக இன்று பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம், அதை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன் எனத் தெரிவித்தார். ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தோம் அதை நோக்கி என் பணி இருக்கும். முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன்; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றார்.
தொடர்ந்து பேசிய உதயநிதியிடம் வாரிசு அரசியல் குறித்த விமர்சனம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இது எனக்கு புதிதல்ல இளைஞர் அணிச் செயலாளராக பதவியேற்கும் போதும் விமர்சனம் வந்தது, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கும் போதும் விமர்சனம் வந்தது. விமர்சனங்களுக்கு எனது செயலால் பதிலடி கொடுப்பேன். மூத்த அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் வழிகாட்டுதலின் படி என்னால் முடிந்த அளவிற்கு எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பொறுப்பை கடுமையாக செய்வேன். என் மீது குறை இருந்தாலும் கூறுங்கள் அதை நான் சரி செய்து கொள்கிறேன்” என்றார்.
அதேபோல் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருந்ததாகவும், ஆனால் அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், ‘மாமன்னன்’ தான் என்னுடைய கடைசி திரைப்படம் என அறிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…