தெலுங்கு திரைப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஒரு சாதாரண ஆள் மக்களுக்கு ஆதராவாக நின்று பெரிய ஹீரோவாக மாறும் கதைக்கு எப்போதுமே வரவேற்பு அதிகமாகவே இருக்கும். தனுஷின் வாத்தி படமும் அப்படிபட்ட கதையை கொண்டது தான்.
1990 காலக்கட்டத்தில் இந்தியாவில் தனியார் மயமாக்கல் கொள்கை அமலுக்கு வருகிறது. பொறியியல், மருத்துவம் போன்ற கல்வியின் வியாபார நுணுக்கத்தை தெரிந்து கொண்ட தனியார் பள்ளிகள் நுழைவுத்தேர்வுக்காக பயிற்சி மையங்களை தொடங்கி தரமான பள்ளி ஆசிரியர்களை விலைக்கு வாங்கி அரசு பள்ளிகளை மூடுகின்றனர். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்கவேண்டும் என்று மக்கள் போராட்டம் செய்ய அரசு கட்டண ஒழுங்குமுறை விதியை கொண்டு வந்து தனியார் பள்ளிகளுக்கு செக் வைக்க நினைக்கிறது.
இதை தெரிந்துக்கொண்ட சமுத்திரக்கனி (வில்லன்) அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அனைவருக்கும் கல்வி கொடுப்பதாக அறிவிக்கிறார். மூடப்பட்ட அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த இரண்டாம், மூன்றாம் தர ஆசிரியர்களை அனுப்பி அவர்களின் கல்வியை கெடுக்க நினைக்கிறார். அதில் கல்வி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என நல்ல எண்ணம் கொண்ட வாத்தியாராக தனுஷ் (பாலா) இருக்கிறார். தாழ்த்தப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கையை கல்வி மூலம் தனுஷ் எப்படி மாற்றுகிறார் என்பது தான் கதையின் கரு.
மேலும், படத்தில் மாணவர்களை படிக்க வைக்க தனுஷ் சொல்லும் புதுப்புது ஐடியாக்கள் ரசிக்கும்படி இருக்கிறது. அதேபோல், படத்தில் அப்பப்ப வரும் சமூக ரீதியான வசனங்கள் கைதட்ட வைக்கிறது. கதாநாயகி சம்யுக்தாவும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பொதுவாக தனுஷ் படத்தில் கெமிஸ்ட்ரி என்பது எப்பவும் சூப்பராக தான் இருக்கும். அதேமாதிரி இந்த படத்திலும் தனுஷ், சம்யுக்தா கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது.
மாணவர்களும் கதைக்கேற்ப தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இந்த கதை ரொம்ப பழையது தான் என்றாலும் அதை கையாண்ட விதம் தான் அருமையாக உள்ளது. பழைய கதையையும் தற்போது ரசிக்கத்தக்க வகையில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெங்கி. அதேசமயம் படம் முழுக்க தெலுங்கு சினிமா மேக்கிங் ஸ்டைல் அப்படியே தெரிகிறது. சமுத்திரகனியின் மிரட்டலான வில்லன் ஆக்டிங் இதில் மிஸ்ஸிங்.
ஒரே ஒரு காட்சியில் இயக்குநர் பாரதிராஜா தலைகாட்டுகிறார். கென் கருணாஸ் எதற்கு வருகிறார் என்றே தெரியவில்லை. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் வா வாத்தி, நாடோடி மன்னன் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் படத்துடன் ஒன்றவில்லை என்றாலும், சில இடங்களில் வரும் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் வாத்தி பார்த்து ரசிக்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…