பொன்னியின் செல்வனில் இப்படி ஒரு விசயம் இருக்கிறதா? ஆதித்த கரிகாலனைக் கொன்று விடுகிறார்கள் என்பதை கேள்வி பட்டோம். ஆனால் அதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்துகொண்டோமா? வீரபாண்டியன் தலையைக் கொய்த ஆதித்த கரிகாலன், பின்னாளில் பாண்டியர்களின் ஆபத்துதவிகள் மூலமாக கொலை செய்யப்பட்டார் என்பது வரலாற்றறிஞர்கள் கூறும் வரலாறு.
நந்தினி, ஆதித்த கரிகாலன் காதலித்ததாக பொன்னியின் செல்வனில் கூறப்படும் கதாபாத்திரம், பெரும்பாலும் கற்பனை கதாபாத்திரமாகத்தான் இருக்கவேண்டும். வரலாற்றில் நடந்த நிகழ்வை புனைந்து சில கதையை சுவாரஸ்யத்துக்காக புகுத்தி பொன்னியின் செல்வனை எழுதியிருக்கிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தி.
வரலாறு இதுதான். ஆதித்த கரிகாலன் போரில் தோற்று புறமுதுகு காட்டி ஓடிய வீரபாண்டியனைத் தேடிச் சென்று அவனை வீழ்த்தி, தலையைக் கொய்துவிட்டு திரும்பி நாடு வருகிறான். பாண்டியன் தலைகொய்த வீரகேசரி எனும் பட்டத்தையும் பெறுகிறான். இதுதான் வரலாற்றில் நிகழ்ந்தது.
இதையே கல்கி, தனது பொன்னியின் செல்வன் நாவலில் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார். கேள்விப்பட்ட சில விசயங்களை வைத்து சில தெரியாத விசயங்களை கற்பனை செய்து புனைந்திருக்கிறார்.
ஆதித்த கரிகாலன், மதுரை சென்றிருந்த போது ஒரு பெண்ணை பார்த்து மயங்கிவிடுகிறான். பின்னாளில், வீரபாண்டியனைத் துரத்திச் சென்று கொல்லும்போது அவன், தான் மதுரையில் பார்த்த அதே பெண்ணிடம் தஞ்சம் புகுந்திருக்கிறான். அவளோ இவனைத் தன் காதலன் என்று கூறுகிறாள். வெறி தலைக்கேறி, கோபத்தின் உச்சிக்கே சென்ற ஆதித்த கரிகாலன், நந்தினியை தள்ளிவிட்டு, வீரபாண்டியன் தலையைக் கொய்துவிடுகிறான்.
ஆதித்த கரிகாலன் கடுங்கோபக்காரன். பொன்னியின் செல்வனிலும் சரி, கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளிலும் சரி அவனது கோபம் பல நாடுகளை வென்ற போர்க்குணம் குறித்து பேசப்பட்டுள்ளது.
இதன்பின்னர், நந்தினி ஆதித்த கரிகாலனை பழிவாங்கும் எண்ணத்தோடு இருக்கிறாள். அவள் பார்வையில் இருந்த வெறுப்பை பார்த்துக் கொண்டே வந்த ஆதித்த கரிகாலன், அதனால் மனம் நொந்து உள்ளே புழுங்கிக் கொண்டிருக்கிறான்.
நந்தினியோ பல ஆண்டுகள் கழித்து 60 வயதான பழுவேட்டரயரை மணந்து தஞ்சாவூருக்கு வருகிறாள். மீண்டும் நினைவுக்கு வந்த அவளை நினைத்து, வருந்துகிறான்.
இப்போதுதான் அந்த வசனம் வந்திருக்கும்.
"இந்தக் கள்ளும், பாட்டும், ரத்தமும், போர்க்களமும்
எல்லாமே அதை மறக்கத்தான்... அவளை
மறக்கத்தான்... என்னை மறக்கத்தான்!"
இப்படி ஆதித்த கரிகாலன் புலம்புகிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆதித்த கரிகாலனுக்கு ஒரு அழைப்பு வருகிறது. கடம்பூர் சம்புவரையர் மாளிகை விருந்தில் கலந்துகொள்ள வருமாறு அந்த அழைப்பு நந்தினி மற்றும் பழுவேட்டரையரிடமிருந்து வருகிறது.
அந்த விருந்து நடந்த மாளிகையில் வந்தியத்தேவன், பழுவேட்டரையர், ரவிதாசன், மணிமேகலை உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள். நந்தினியும், ஆதித்த கரிகாலனும் உணர்ச்சி பொங்க பேசிக்கொள்கின்றனர். திடீரென
விளக்கு அணைகிறது..
ரத்த வெள்ளத்தில் அங்கே மிதந்து கொண்டிருக்கிறது ஒரு உடல்... யார் அது? படுகொலையை யார் செய்திருப்பார்? எதற்காக அந்த கொலை நடந்திருக்கும்? - அடுத்த பதிவில் காண்போம்... நாளை...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…