தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தபோது விமானநிலையப் பகுதியில் மின்சாரம் தடைபட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா கடந்த 10ம் தேதி இரண்டுநாள் பயணமாக சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமானநிலையத்தில் அவர் இறங்கியபோது அங்கு மின்சாரம் தடைபட்டது. சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு மின்விநியோகம் சீரானது. உள்துறை அமைச்சர் வருகையின்போது, மின்சாரம் தடைபட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜகவினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.
இந்த விவகாரத்தை தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக கையில் எடுத்துள்ளது. உள்துறை அமைச்சர் பயணத்துக்குப் பின், அவருடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக உள்துறை அதிகாரிகள் தணிக்கை செய்வது வழக்கம். அதன்படி, அமித்ஷாவின் தமிழக வருகைக்கு பிறகான உள்துறை அதிகாரிகளின் தணிக்கை நேற்று நடைபெற்றது. அப்போது, சென்னை விமானநிலையத்தில் அமித்ஷா இறங்கியபோது மின்தடை ஏற்பட்டது அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடாக உள்துறை கருதுகிறது.
எனவே, இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே, அமலாக்கத்துறையை ஏவி அமைச்சர் செந்தில்பாலாஜியை மத்திய பாஜக அரசு கைது செய்து அரசியல் செய்வதாக திமுகவினர் குற்றம்சாட்டிவரும் நிலையில், தற்போது அமித்ஷா வருகையின்போது மின்சாரம் தடைபட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…