ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் அரசுப்பள்ளி மாணவர் கிரிக்கெட் விளையாடியபோது நெஞ்சில் பந்து தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
ராமநாதபுரம் மாவட்டம், வன்னிவயல் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவரது மகன் 11 வயதான சுபாஷ்குமார் அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது கோடை விடுமுறை என்பதால் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
எமனாக மாறிய பந்து
கிரிக்கெட் விளையாடியபோது எதிர்பாராதவிதமாக பந்து சுபாஷ்குமாரின் நெஞ்சில் தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அங்கிருந்தவர்கள் உதவியுடன் உடனடியாக சுபாஷ்குமாரை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, உறவினர்கள் சுபாஷ் குமாரின் உடலை கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டு தங்கள் சொந்த ஊரான வன்னிவயலில் அடக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் பஜார் காவல் துறையினர் விசாரணை செய்தனர். கோடை விடுமுறையில் குதூகலமாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…