கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணத்தால் பெரும் வன்முறை வெடித்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட சின்ன சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி தாலுக்காக்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவி கடந்த 13 ஆம் தேதி விடுதியின் 3வது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் தங்கள் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மாணவர் அமைப்பினர் இன்று பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அமைதியாக தொடங்கிய போராட்டம் சிறிது நேரத்திலேயே வன்முறைக்கு மாறியது.
போராட்டக்காரர்கள் காவல்துறை மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தியதோடு போலீஸ் வாகனங்களை தீ வைத்து எரித்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் நின்றுக்கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்து எரித்துள்ளனர்.
நிலைமை எல்லை மீறிச் சென்ற நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் முதல்வர் ஸ்டாலினும் அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி தாலுக்காக்களில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. மேலும் கலவரம் நிகழ்ந்த பள்ளி வளாகம் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கிடையே அதிரடிப் படையினர் களமிறங்கி வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்து வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…