இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரையும், அவர்களின் 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரம் பெய்த மழை மற்றும் கடலோரப் பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து 461 விசைப்படகுகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கிரீன்ஸ் மற்றும் பாலா ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை சுற்றிவளைத்து சிறைபிடித்தனர். அதில் இருந்த 15 மீனவர்களையும் அவர்கள் கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.
கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. ஏற்கனவே, 2 முறை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…