ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 3 ரயில்கள் மோதிய பயங்கர விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் உட்பட 3 பேரை சிபிஐ அதிரடியாகக் கைது செய்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை விபத்துக்குள்ளாகின. இந்த கேர விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அண்மையில் மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், கோர விபத்துக்கு மனித தவறே காரணம் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மேலும் இந்த விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டரின் கூடுதல் விசாரணை நடத்தப்படவேண்டுமெனவும் அதில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதேபோல், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மற்றொரு புறம் சிபிஐ-யும் விசாரணை நடத்திவருகிறது. விபத்து நாசவேலை எதுவும் காரணமாக இருக்குமோ? என்பது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவரும் சிபிஐ, இன்று ரயில்வேயின் மூத்த பொறியாளர் அருண்குமார் மஹந்தா மற்றும் பொறியாளர்கள் முகம்மது அமீர்கான், பப்பு குமார் ஆகியோரை அதிரடியாகக் கைது செய்துள்ளது. அவர்கள் மீது ரயில் விபத்துக்கான ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…