சமீபத்தில் சேலத்தில் மத்திய அரசுக்கு எதிராக நோட்டீஸ் கொடுப்பதில் முந்தியடித்துக் கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் காங்கிரசார் தங்களுக்குள் மோதிக் கொண்டது வைரலான நிலையில், தற்போது திருச்சி காங்கிரசில், யார் பேட்டி கொடுப்பது என தங்களுக்குள் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி விதிப்பு போன்றவற்றை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டங்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில் திருச்சியில், தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜவஹர் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் பேரணியாக திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமையகமாத்திற்கு சென்றனர்.
அங்கு பத்திரிகையாளர்கள் கூடியிருந்த நிலையில், பத்திரிக்கையாளர்களுக்கு யார் பேட்டி கொடுப்பது என்ற பிரச்னை எழுந்து மாவட்டத் தலைவர் ஜவஹர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், மாவட்டத் தலைவர் ஜவஹர் கோஷ்டியை சேர்ந்த ஒருவர், வக்கீல் சரவணனை தாக்க, இரு கோஷ்டிகளும் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இவர்களது கோஷ்டி மோதலால் காங்கிரஸ் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படடது. ஆர்ப்பாட்டத்திற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் இது குறித்து தகவலறிந்து வந்து இரு கோஷ்டிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதன் களேபரத்தால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. சமீபத்தில் சேலம் காங்கிரசில் பொதுமக்கள் முன்னிலையில், இதேபோல் காங்கிரசார் தங்களுக்கிடையே மல்லுக்கட்டிய நிலையில், தற்போது திருச்சியிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தி கட்சியை வளர்க்க வேண்டிய காங்கிரசார், தங்களுக்கிடையே கோஷ்டி மோதலால் மோதிக்கொள்வது, எந்த கோஷ்டிகளையும் சாராத நடுநிலையான காங்கிரசாரிடம் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…