ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி கட்சி தனது ஆதரவை இன்று அறிவித்தது. கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அழைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், பஞ்சாப் எம்பி ராகவ் சதா, எம்எல்ஏ அதிஷி மற்றும் பிஏசி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிக்கும் என மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். "நாங்கள் திரௌபதி முர்முவை மதிக்கிறோம் ஆனால் ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கும்" என்று சிங் கூறினார்.
பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரான திரௌபதி முர்முவுடன் யஷ்வந்த் சின்ஹா நாட்டின் உயர்ந்த பதவிக்கு போட்டியிடுகிறார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி மட்டுமே ஆட்சியில் உள்ளது. டெல்லியைச் சேர்ந்த 3 பேர் உட்பட இரு மாநிலங்களில் இருந்து 10 எம்பிக்கள் உள்ளனர். மேலும், அக்கட்சிக்கு பஞ்சாபில் 92, டெல்லியில் 62, கோவாவில் 2 என மொத்தம் 156 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…