61 நாட்கள் மீன்பிடித்தடைக்காலம் முடிவுக்கு வந்த நிலையிலும், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் வீசும் பலத்த காற்றின் காரணமாக, தூத்துக்குடி மற்றும் குமரி பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியவில்லை.
ஆண்டு தோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ஆம் தேதி வரை 61 நாட்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க, தடை விதிக்கப்படும். திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் இருந்து, குமரி மாவட்டம், நீரோடி வரையிலும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 15 கடலோர மாவட்டங்களிலும் நேற்று நள்ளிரவு மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்றது. இதையடுத்து தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாராக இருந்தனர். ஆனால், மன்னார் வளைகுடா, தென்கடலோர பகுதி மற்றும் குமரி கடல் பகுதிகளில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால், வருகிற 18-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மேலும் நான்கு நாட்கள், கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். இதேபோல, குமரி கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என வானிலை அறிவிப்பின் காரணமாக, குமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 350 க்கும் மேற்பட்ட விசைபடகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஆனால், சென்னை காசிமேடு மீனவர்கள், மீன்பிடி தடைகாலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, கற்பூரம் ஏற்றி, பூசணிக்காய் சுற்றி தேங்காய் உடைத்து, பூஜைகள் போட்டும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…