மத்திய அரசு இந்தியைத் திணித்தால் அதை தமிழக பாஜக எதிர்க்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
தனது உயர்கல்வி தொடர்பாக இரண்டு வார பயணமாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்கா சென்ற அவர், கல்விக்கு மத்தியில், அங்குள்ள பாஜக ஆதரவாளர்கள் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்நிலையில், தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு அண்ணாமலை தமிழகம் திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பாஜகவினர் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் குறித்து, அவர்கள் சார்பாக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் அநாகரீகமாக நடந்துகொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
இதையடுத்து கடந்த சில நாட்களாக தேவர் ஜெயந்திக்கு பிரதமர் மோடி தமிழகம் வருவதாக வெளியான செய்தி குறித்து கேட்டதற்கு, “அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேவர் குருபூஜைக்கு பிரதமர் மோடி வருவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் பாஜகவினுடைய விருப்பம் என்னவென்றால் பிரதமர் மோடி எல்லா தலைவர்களின் குருபூஜைக்கும் வரவேண்டும் என்பதுதான். பிரதமர் குருபூஜைக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை வைப்போம்.” என அண்ணாமலை கூறினார்.
தொடர்ந்து இந்தி திணிப்பு விவகாரம் குறித்து பேசிய அண்ணாமலை, “இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்பது தான் மத்திய அரசின் கல்வி கொள்கை. ஒருவேளை மத்திய அரசு தேர்வுகளை இந்தி மொழியில் மட்டும் தான் நடத்த வேண்டும் என எப்போது சொன்னாலும் அதை தமிழக பாஜக நிச்சயம் எதிர்க்கும். அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் மத்திய பாஜக அரசு அதை ஒருபோதும் செய்யாது.” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…