கள்ளக்குறிச்சி கலவரத்திற்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாத நிலையில், கைது செய்யப்பட்டதால், தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த இரு சகோதரர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
இதில் திடீரென நுழைந்த ஒரு கும்பல் பள்ளியின் மீது கடும் வன்முறையை நிகழ்த்தி, பள்ளி வாகனங்களை சேதப்படுத்தியதோடு, போலீஸ் வாகனங்களையும் தீ வைத்து எரித்தது. மேலும் போலீசார் பலரும் இதில் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
இதையடுத்து இந்த வன்முறையில் தொடர்புள்ளது எனக் கூறி நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதில் வன்முறைக்கு தொடர்பே இல்லாத அப்பாவிகள் பலரும் கைது செய்யப்பட்டதாக ஊர் மக்கள் குற்றம் சாட்டி, டிஜிபி வரை புகார் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், வன்முறையில் தொடர்பிருப்பதாக கூறி கைது செய்யப்பட்ட பட்டதாரி இளைஞர்களான குடியரசு மற்றும் வசந்த் எனும் இரு சகோதரர்கள் வேதனையுடன் பேட்டியளித்துள்ளனர்.
தாங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த சூழலில், வன்முறையுடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத தங்களை போலீசார் கைது செய்துள்ளதால் தங்களது எதிர்காலம் பாழாகி போய்விட்டதாக குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, வழக்கறிஞர் ரத்தினம் என்பவர், கள்ளக்குறிச்சி கலவரத்தில் அப்பாவிகள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர்களை உடனடியாக கண்டறிந்து விடுதலை செய்வதோடு, அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…