ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் 5 ஆண்டுகளுக்குப் பின் நாளை காலை 10.30 மணிக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சைகள் கிளம்பியதை அடுத்து, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 2017 செப்டம்பரில் அமைக்கப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என மொத்தம் 157 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நிறைவடைந்த நிலையில், விசாரணை அறிக்கையை இறுதி செய்யும் பணி நடந்து வந்தது.
இதற்கிடையே, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை ஆவணங்களை ஆய்வு செய்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணையத்திடம் அறிக்கையை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களின் சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று கூறியதாக தகவல் கசிந்தது.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் தாங்கள் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில், இறுதி அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் ஆணையம் தயார் செய்துள்ளது.
சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை நாளை காலை 10.30 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆறுமுகசாமி ஒப்படைக்க உள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…