அமெரிக்காவில் பணவீக்கம் மே மாதத்தில் 40 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க தொழிலாளர் துறை நேற்று வெளியிட்ட தரவுகளின்படி, நுகர்வோர் விலைக் குறியீடு முந்தைய ஆண்டை விட 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு தங்குமிடம், பெட்ரோல் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல விஷயங்களுடன் தொடர்புடையது.
ஏப்ரல் மாதத்தில் சரிவுக்குப் பிறகு, எரிசக்தி குறியீடு மே மாதத்தில் 3.9 சதவீதம் உயர்ந்தது. பெட்ரோல் குறியீடு 4.1 சதவீதம் உயர்ந்தது மற்றும் பிற முக்கிய கூறு குறியீடுகளும் அதிகரித்தன. மேலும் மே மாதத்தில் உணவு குறியீட்டு எண் 1.4 சதவீதம் அதிகரித்தது.
"மே மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் அனைத்துப் பொருட்களின் குறியீடும் 8.6 சதவிகிதம் அதிகரித்தது. இது டிசம்பர் 1981 இல் முடிவடைந்த காலகட்டத்திற்குப் பிறகு மிகப்பெரிய 12 மாத அதிகரிப்பு" என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
அதிகரித்து வரும் பணவீக்கம், ஏற்கனவே கடன் வாங்கும் செலவை உயர்த்தி பொருளாதாரத்தை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.
இதனால் அமெரிக்க மத்திய வங்கி அடுத்த வாரம் மற்றும் மீண்டும் ஜூலையில் நடக்கும் கூட்டத்தில் வட்டி விகிதங்களை அரை சதவிகிதம் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பொருளாதார சிக்கலால் விழிபிதுங்கி நிற்கும் அமெரிக்கர்களுக்கு இது இன்னும் பேரிடியைக் கொடுக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…