ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் இயக்கப்படும் பாரத் கௌரவ் சுற்றுலா சிறப்பு ரயில் ஆடி அமாவாசை என்ற பெயரில்தனது சுற்றுப்பணத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி தொடங்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வேயின் சுற்றுலாப்பிரிவான ஐ.ஆர்.சி.டி.சியின் பொது மேலாளர் ராஜலிங்கம் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:
பாரத் கௌரவ் சுற்றுலா சிறப்பு ரயில், ஆடி அமாவாசை என்ற பெயரில் இயக்கப்படுகிறது. தனது சுற்றுப்பயணத்தை ஆகஸ்ட் 7ம் தேதி திருநெல்வேலியில் இருந்து துவங்குகிறது. 11 நாட்கள், 12 இரவுகள் என தனது பயணத்தை மேற்கொள்ளும் பாரத் கௌரவ் ரயிலில் ஓம்காரேஸ்வரர், மஹாகாலேஸ்வர்(ஜோதிர்லிங்கம்), ஹரித்வார், ரஷிகேஷ், திருவேணி சங்கமம்(அலகாபாத்), வாரணாசி(காசி) மற்றும் காயா உள்ளிட்ட சுற்றுலா தளங்களை பார்வையிடலாம்.
இந்த ஆன்மீக சுற்றுலாப்பயணத்தில் யாத்ரீகளுக்கு மூன்றாம் வகுப்பு ஏசி மற்றும் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் பயண வசதி, ஏசி மற்றும் நான்ஏசி, தங்குமிடம், உள்ளூர் பார்வையிட போக்குவரத்து வசதி, உணவு மற்றும் தனியார் பாதுகாவலர் வசதிகள் ஆகியவை செய்துதரப்படும். இந்த சிறப்பு சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் தொடங்கி விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்லும்.
இந்த சுற்றுலா செல்வதற்கு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு 39,100 ரூபாயும், இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணம் மேற்கொள்ள 21,800 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் தொடங்க ஒரு வாரமே உள்ள நிலையில், ஆடி அமாவாசை யாத்திரை ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…