மேலூர் அருகே வீட்டினுள் குழந்தையின் தாய் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாவினிப்பட்டியைச் சேர்ந்த மதுக்குமார்- ராஜசுதா தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மூன்றாவதாக ஒன்றரை வயதில் ஹரிபிரசாத் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மதுகுமார் வெளியே சென்ற நிலையில், அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் அருகில் உள்ள பள்ளிக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் ராஜசுதா வீட்டு வேலைகளை முடித்து விட்டு குழந்தை ஹரிபிரசாத்துடன் தூங்கி உள்ளார். அப்போது, தூக்கத்தில் இருந்து எழுந்த ஹரிபிரசாத் வீட்டின் முன் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். தூக்கத்தில் இருந்து எழுந்த ராஜசுதா குழந்தையை காணாமல் தேடிய நிலையில், குழந்தை ஹரிப்பிரசாத் தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் குழந்தையை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தை ஹரிபிரசாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர். உயிரிழந்த குழந்தை ஹரிப்பிரசாத்தை ராஜசுதா மடியில் போட்டு கதறி அழுதது, காண்போரை கண் கலங்க வைத்தது. இதுகுறித்து தகவலறிந்த மேலூர் காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர்தொட்டியில் தவறிவிழுந்து குழந்தை உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…