காஷ்மீரில் உள்ள ராஜௌரி மாவட்டத்திற்கு அருகே இந்திய ராணுவ முகாமிற்குள் புகுந்த 2 பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். அதன்படி, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. புதுபட்டியைச் சேர்ந்த லட்சுமணன் கடந்த 2019-ம் ஆண்டு முதல் ராணுவத்தில் இணைந்து சேவையாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது . அவரது உடலுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து ராணுவ வீரர் லட்சுமணன் உடல் சொந்த ஊரான டி புதுப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி, இறுதிச்சடங்கு செய்த பிறகு உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
மேலும், லட்சுமணனிம் மறைவுக்கு அவரது ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில், ‘பதிலடி கொடுக்க காத்திருக்கும் வருங்கால ராணுவ வீரர்கள்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும், இந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…