பெரம்பலூரில் ஒன்றிய அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி கொண்டிருந்த மதுரையை சேர்ந்த இரண்டு பெண் சமூக ஆர்வலர்களுடன் பா.ஜ.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர்களான வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது சகோதரி நிரஞ்சனா இருவரும் ஒன்றிய அரசுக்கு எதிரான வாசகங்களடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்டம்தோறும் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.
இந்நிலையில் சகோதரரிகள் இருவரும் இரவு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையோர வியாபாரிகளிடம் மோடியை கண்டிக்கும் வாசகங்களுடனான துண்டு பிரசுரங்களை வழங்கி கொண்டிருந்தனர்.
அப்போது பா.ஜ.க மாவட்ட செயலாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில்அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட பா.ஜ.க வினர் வழக்கறிஞர் நந்தினி கையிலிருந்ததுண்டு பிரசுரங்களை பிடுங்கி கிழித்து வீசியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீஸார் இருதரப்பினரையும் களைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் அதை ஏற்க மறுத்த சகோதரிகள் இருவரும் போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் இறங்கினர்.இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகிய இருவரையும் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…