இந்தியாவில் உள்ள கல்லூரி வளாகங்களில் நிலவும் சாதியப் பாகுபாட்டை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் சாதியப் பாகுபாட்டால் தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வெமுலா மற்றும் மகாராஷ்டிரா மருத்துவக் கல்லூரியில் சாதிய வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவி பாயல் தாட்வி ஆகியோரின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தல் மனுத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், கல்லூரிகளில் சாதியப் பாகுபாட்டால் எதிர்காலத்தில் இனியும் ஒரு பெற்றோர் கூட தங்கள் பிள்ளைகளை இழக்கக் கூடாது. அதற்கு யுஜிசி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவானது அதன் சட்டத்திட்டங்களின்படி உயர் கல்வி வளாகங்களில் சமத்துவத்தை பேணுவதை உறுதி செய்ய வேண்டும். உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றில் சம வாய்ப்பு மையங்களை உருவாக்கிய அதன் மூலம் மாணவர்களின் குறைகளை அறிய வேண்டும்.
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களும் தங்கள் இணையதளங்களில் சாதிப் பாகுபாட்டை நீக்குவது தொடர்பான நடைமுறைகளை விவரிக்க உத்தரவிட வேண்டும். அதேபோல் கல்லூரிகளை ஆய்வு செய்து அங்கீகரிக்கும் நேக் (NAAC) பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில் உகந்த சூழல் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.போப்பண்ணா தலைமையிலான அமர்வுமுன்பு விசாரணைக்கு வந்தது. அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், "கல்லூரி வளாகங்களில் சாதியப் பாகுபாட்டை ஒழிக்க பல்கலைக்கழக மானியக் குழு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், கல்லூரி வளாகங்களில் சாதியப் பாகுபாட்டை ஒழிப்பது தொடர்பான முயற்சியில் இனி யுஜிசி மனுதாரர்களையும் ஆலோசித்து கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும், பட்டியலின, பழங்குடியின மாணவ சமுதாயத்தை முன்னணிக்கு கொண்டுவர யுஜிசி என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும்" என்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கேட்டுக்கொண்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…