நாடு முழுவதும் நிலத்தடி நீரை எடுக்க ரூ.10,000 செலுத்தி தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) வாங்க வேண்டும் எனத் தகவல் வெளியாகியது. இது என்ன புதுசா இருக்கு? தமிழகத்தில் இதற்கு என்ஓசி எப்படி விண்ணப்பிப்பது என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. அதைப்பற்றி முழுமையாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
என்ஓசி அறிவிப்பு வந்தது எப்படி?
நாடு முழுவது கடந்த சில பத்தாண்டுகளில் நிலத்தடி நீர் மிக அதிகமாக உறிஞ்சப்படுவதால் எதிர்காலத்தில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை விரிவாக ஆலோசனை செய்த மத்திய அரசு 2020 செப்டம்பர் 24இல் நாடு முழுவதும் நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெரும் நடைமுறையை செயல்படுத்துவது குறித்த அறிவிப்பை அரசாணையாக வெளியிட்டது.
இதற்கு பின்னர் பலமுறை இது குறித்த அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டாலும், பெரிய முன்னேற்றம் இல்லாத நிலையிலும், கொரோனா காரணமாக தாமதமான நிலையிலும், பின்னர் ஜூன் 30, 2022 ஐ பதிவு செய்வதற்கான காலக்கெடுவாக நிர்ணயித்தது. இதன் பின்னர் தற்போது செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அனைவரும் பணம் செலுத்தி தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த தடையில்லா சான்றிதழ் பெறுவதில் இருந்து, 2 எச்பி வரை திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்தும் தனிநபர்கள், கிராம தண்ணீர் விநியோக சேவை, விவசாய பயன்பாடு மற்றும் தினம் 10 கியூபிக் மீட்டர் வரை பயன்படுத்தும் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு விலக்கு
நாடு முழுவதும் இதை கட்டாயமாக்கினாலும், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் மாநில அளவிலேயே நிலத்தடி நீரை முறைப்படுத்துவதாக அறிவித்து, நிலத்தடி நீர் பயன்பாட்டிற்கு தனியாக என்ஓசி நடைமுறையை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளன.
மொத்தம் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் இல்லாமல் நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு தனியாக என்ஓசி நடைமுறையை கொண்டுள்ளன. ஆந்திரா, கோவா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, டெல்லி, தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்கு வங்கம், புதுச்சேரி, சண்டிகர், லட்சத்தீவுகள், பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதில் அடங்கும்.
தமிழகத்தில் எப்படி?
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திடம் நேரடியாக இல்லாமல், மாநிலங்கள் தாங்களே தனியாக என்ஓசி பயன்பாட்டைக் கொண்டுள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இதனால் தமிழகத்தில் உள்ளவர்கள் யாரும் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திடம் என்ஓசி பெற விண்ணப்பிக்கத் தேவையில்லை.
தமிழகத்தில் நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு என்ஓசி பெற விண்ணப்பிக்க தமிழக அரசின் மாநில தரை மற்றும் மேற்பரப்பு நீர் ஆதாரங்கள் தரவு மைய இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது விண்ணப்பக் கட்டணமாக ரூ.6,000 செலுத்த வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…