கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதால், வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அரபி கடலில் உருவான, 'பிபர்ஜாய்' புயல் நேற்று குஜராத்தில் கரையைக் கடந்தது. இதைத் தொடர்ந்து, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகம், புதுச்சேரியில், இன்றும், நாளையும் (ஜூன்.16,17) 41 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, நாளை மறுதினம் (ஜூன்.18) முதல் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில், வரும் 18, 19ம் தேதி கனமழை பெய்யும் என்றும், திருச்சி, பெரம்பலுார், கடலுார், மயிலாடுதுறை மற்றும் அரியலுார் மாவட்டங்களில் 18ம் தேதியும், நாமக்கல்.ஈரோடு மாவட்டங்களில் 19ம் தேதியும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேநேரத்தில், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு, 65 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று தற்போது வீசிவருவதாகவும், எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு இன்று முதல், வரும் 19ம் தேதி வரை செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…