மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்துப் பேசுவதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்கிறார்.
கர்நாடகாவின் மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்டும் முயற்சியை அம்மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ள நிலையில் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கக் கோரி கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
கர்நாடக துணை முதலமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, நேற்று மாலை நீர்வளத்துறையின் உயர்அதிகாரிகளுடனும் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கர்நாடக அரசு காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவு குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், காவிரியில் கர்நாடக அரசு திறக்க வேண்டிய தண்ணீரின் அளவு தொடர்பான ஆவணங்களுடன் அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்கிறார். அங்கு, காவிரி மேலாண்மை வாரியத்தின் ஆண்டுக்கூட்டத்தில் மேகதாது அணை குறித்து நடைபெறும் விவாதத்தில் பங்கேற்கும் அமைச்சர் துரைமுருகன், அதைத் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரையும் சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…