Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொண்டர்களின் தலைமை தொண்டனாக.. முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பளீச்!!

Sekar September 16, 2022 & 11:23 [IST]
தொண்டர்களின் தலைமை தொண்டனாக.. முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பளீச்!!Representative Image.

திராவிட அமைப்புகளின் பிதாமகரான பெரியார், திமுக நிறுவனர் அண்ணா ஆகிய இருவரது பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட தினம் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழாவாக திமுக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுநகரில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திராவிட மாடல் மற்றும் ஆரிய மாடல் குறித்து பேசியது வரவேற்பை பெற்றுள்ளது.

முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது பின்வருமாறு :- தமிழ்நாட்டில் நடைபெறுவது ஒரு கட்சியுடைய ஆட்சி அல்ல; இது ஒரு இனத்தின் ஆட்சி. காமராஜர் ஆட்சி, அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி என்ற வரிசையில் இப்போது நான் ஸ்டாலி்ன் ஆட்சி என்று குறிப்பிடாமல், திராவிட மாடல் ஆட்சி என்று குறிப்பிட்டபோது இது அனைவருக்கும் வியப்பாக இருந்தது. ஆனால் இந்த திராவிட மாடல் ஆட்சி தற்போது இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம். ஆனால் இன்னாருக்கு மட்டும் கல்வியை கொடு, இன்னாருக்கு கொடுக்காதே. இன்னாரை கோயிலுக்குள் விடு, இன்னாரை விடாதே, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பிரி என்பது தான் ஆரிய மாடல். 

ஆனால் எல்லாருக்கும் எல்லாம் கொடு, ஆணும், பெண்ணும் சமம் என்புதுதான் திராவிட மாடல். வர்த்தக பேதம், பாலின பாகுபாடு கூடாது என்பதுதான் இந்த திராவிட மாடல். நான் தனிப்பட்ட ஸ்டாலினாக இங்கு ஆட்சி கட்டிலில் அமரவில்லை. உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு தொண்டர்களின் தலைமை தொண்டனாக தான் நான் ஆட்சி செய்து வருகிறேன். 

இனி தமிழகத்தை எப்போதும் நிரந்தரமாக ஆட்சி செய்யப்போவது திமுகதான். கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் கட்சியையும், ஆட்சியையும் தங்கள் இரு கண்களாக கருதி செயல்பட வேண்டும்.

தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் கூட்டாட்சி, சமூக நீதி, மதசார்பின்மை ஆகியவற்றை நிலைநாட்ட வேண்டிய கடமை நமக்கு உள்ளது. வலிமையான மாநிலங்கள்தான் கூட்டாட்சி தத்துவத்திற்கு அடிப்படை. தமிழகத்தை போன்று அனைத்து மாநிலங்களும் வலிமை மிக்கவையாக, வளம் படைத்தவையாக இருக்க வேண்டும் என்பதே திமுகவின் அரசியல் கொள்கையாகும்.

ஜிஎஸ்டியால் மாநிலங்களின் நிதி உரிமை, நீட் கல்விக் கொள்கையால் மருத்துவ கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதை தடுக்க 2024 மக்களவை தேர்தலிலும், திமுக வெற்றி கனியை பறித்து நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை தொடர வேண்டும். அதற்கு கழக தொண்டர்கள் இப்போது இருந்தே களப்பணி ஆற்ற வேண்டும். நாற்பதும் நமதே, நாளும் நமதே. 

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக முப்பெரும் விழாவில், கருணாநிதி தன் வாழ்நாளில் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்களில் 4,041 மடல்களின் 54 தொகுப்புகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்