2024 தேர்தலில் மோடியை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு, இப்போது பல்வேறு கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், மோடியும் அமித் ஷாவும் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். அவர்கள் இருவரும் போட்டியில் மட்டுமே பாஜக 40 தொகுதிகளையும் கைப்பற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜக மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்தாலும் கூட, தென்னிந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் கர்நாடகா தவிர்த்து எங்கும் காலூன்ற முடியவில்லை. தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் தற்போது பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவது போல் தோன்றினாலும், அது ஆட்சியை பிடிக்க உதவும் அளவுக்கு உள்ளதா என்பது கேள்விக்குறிதான்.
இந்நிலையில், தமிழகத்தில் அண்ணாமலை மூலம் கிடைத்த வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் இருந்தாலும் கூட, பாஜகவின் தனிப்பட்ட வளர்ச்சியில் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் 2024இல் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 25 இடங்களை வெல்லும் என அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் எழுதிய எவரும் எட்ட முடியாத எட்டு ஆண்டு சாதனை மோடியின் சாதனை விளக்க புத்தக வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் சுதந்திரப் போராட்ட தியாகியான தீரன் சின்னமலை வ. உ சி, சுப்பிரமணிய சிவா, பாரதியார் உள்ளிட்டோரின் வாரிசுகளும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய அர்ஜுன் சம்பத், "திராவிட மாடல் ஆட்சி வரலாற்றை இருட்டடிப்பு செய்து வருகிறது. முதன் முதலில் தேசிய கொடி ஏற்றப்பட்ட ஓமந்தூரார் தோட்டத்தில் அவருக்கு புகைப்படங்களோ, சிலையோ எதுவும் இல்லை. ஆனால் கருணாநிதியின் சிலைகள் திறக்கப்படுகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தலைவர்களை இருட்டடிப்பு செய்துவிட்டு, எங்கு பார்த்தாலும் ஈ.வெ.ரா, அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தை பொம்மை நாடாக மாற்ற பார்க்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தியாகிகளின் நினைவிடத்திற்கு செல்லாமல், மிஷினரிகளின் இடங்களுக்குச் செல்கிறார். தமிழகத்திலிருந்து 39 எம்பிக்கள் வீணாக இருந்து வருகின்றனர்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அவர்கள் இங்கு போட்டியிட்டால் தான் தமிழகத்தில் பாஜக வலுப்பெறும். மேலும் 40 தொகுதிகளும் பாஜக வசம் வரும். தமிழகமும் வளரும்." என்று கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…