தமிழகத்தில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், "கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (அமுல் நிறுவனம்) இது நாள் வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழகத்தில் உள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்ததது. இந்த நிலையில், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது.
கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் வாயிலாக பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. மாநிலங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் பால் உற்பத்தி பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவு சங்கங்கள் செழிக்க, பால் கொள்முதலை அனுமதிப்பதே வழக்கம். ஆனால், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல் வெண்மை புரட்சி கொள்கைக்கு எதிராக உள்ளது.
நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள நிலையில், இது நுகர்வோருக்கு மேலும் சிக்கல்கலை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், பால் மற்றும் பால் பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களுக்கு இடையே போட்டியை உண்டாக்கிவிடும். எனவே, மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்த நிறுத்த வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…