தேசிய மகளிர் ஆணையம் (NCW) 2022ல் ‘குடும்ப வன்முறைக்கு எதிரான பெண்களைப் பாதுகாத்தல்’ கீழ் 6,500 புகார்களைப் பெற்றதாகக் கூறியுள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கிட்டத்தட்ட 31,000 புகார்களை 2022 ஆம் ஆண்டில் பெற்றதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையின்படி, தேசிய மகளிர் ஆணையம் மூலம் பெறப்பட்ட மொத்த புகார்கள் 2021 இல் சுமார் 23,700 ஆக இருந்த நிலையில், அது 2022 இல் 30,800 வழக்குகளாக, அதாவது 30% உயர்ந்துள்ளது.
இந்த 30,957 புகார்களில், அதிகபட்சமாக 9,710 புகார்கள் பெண்களிடையே உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் தொடர்பானவையாக பதிவாகியுள்ளது. இதையடுத்து 6,970 புகார்கள் குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை துன்புறுத்தல் தொடர்பாக பதிவாகியுள்ளது.
2,523 புகார்கள், பெண்களை அடக்குதல் அல்லது பாலியல் வன்கொடுமை செய்தல், 1,701 புகார்கள் கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு முயற்சி, 1,623 புகார்கள் பெண்களுக்கு எதிரான காவல்துறை அக்கறையின்மை மற்றும் 924 புகார்கள் இணைய குற்றங்கள் தொடர்பானவை என தெரிய வந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 54.5% சதவீதம், அதாவது 16,872 புகார்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மட்டுமே பெறப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு 33,906 புகார்களை தேசிய மகளிர் ஆணையம் பெற்ற நிலையில், அதன் பிறகு, தற்போது தான் மிக அதிகபட்சமாக புகார்கள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பாக பேசிய தேசிய மகளிர் தலைவர் ரேகா ஷர்மா, "புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர, தேசிய மகளிர் ஆணையம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும், இந்த பிரச்சனையைப் பற்றி பேசவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிரச்சார முறையில் நாடு தழுவிய அளவில் மாநிலங்கள் முழுவதும் பல்வேறு தரப்பும் பங்கெடுக்க வேண்டிய தேவை உள்ளது." என்று கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…