திமுக எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட எம்எல்ஏவே தனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
யார் அந்த எம்எல்ஏ?
கடலூர் எம்எல்ஏவாக உள்ள அய்யப்பன் தான் அந்த நபர். இவருக்கும் வேளாண் துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலருமான எம்ஆர்கே பன்னேர்செல்வத்துக்கும் இவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான் எனக் கூறப்படும் நிலை தான் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தலைமையின் முடிவுக்கு எதிராக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி தலைவர் உள்ளிட்ட சில பதவிகளை தனது ஆதரவாளர்கள் கைப்பற்ற உதவியுள்ளார். மேலும் கடலூர் மாநகராட்சியிலும் தலைமை நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக தனது ஆதரவு வேட்பாளரை வெற்றி பெற வைக்க முயன்றுள்ளார்.
ஆனால் இதை சரியான நேரத்தில் கண்டுபிடித்த எம்ஆர்கே பன்னீர்செல்வம் அய்யப்பனின் முயற்சியை முறியடித்து தனது ஆதரவு வேட்பாளரை வெற்றி பெறச்செய்துள்ளார். இந்த விவகாரம் தலைமை வரை சென்ற நிலையில், தலைவர்களாக தேர்வு செய்யப்ப்பட்ட அய்யப்பன் ஆதரவு பிரமுகர்களை பதவி விலக உத்தரவிடப்பட்டது.
தலைமையின் உத்தரவை கிஞ்சித்தும் மதிக்காத அய்யப்பன் ஆதரவு திமுகவினர் தொடர்ந்து பதவி விலகாமல் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் மீண்டும் தலைமையை எட்டியதும் கட்சி கட்டுப்பாட்டை மீறிய அய்யப்பன் எம்எல்ஏ அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை மீண்டும்கட்சியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை, திமுக மேலிடம் இதுவரை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அவர் தற்போது திமுகவில் இல்லை எனும் சூழலே நிலவுகிறது. இந்நிலையில், எம்ஆர்கே பன்னீர் செல்வத்தின் பேச்சைக் கேட்டுத்தான் தலைமை இவ்வாறு நடந்து கொள்வதாக அய்யப்பன் கடும் அதிருப்தியில் இருந்து வருவதாகவும், இதனால் அய்யப்பன் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுக எம்எல்ஏ அய்யப்பன் தான் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தான் தொடர்ந்து திமுகவிலேயே செயல்படுவேன் என்றும் எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்த விவகாரத்தைப் பொருத்தவரை திமுக வட்டாரங்களில் வேறொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. எம்ஆர்கே பன்னீர் செல்வத்தின் அழுத்தத்தால் அய்யப்பன் தொடர்ந்து தலைமையால் புறக்கணிக்கபப்படுவதாகவும், இந்த சூழ்நிலையில் தனது இருப்பு குறித்து தலைமைக்கு தெரியப்படுத்தவும், தொடர்ந்து புறக்கணிப்பு நடந்தால் பாஜகவுக்கு செல்லவும் தயங்க மாட்டேன் என்பதை தலைமைக்கு உணர்த்தும் விதமாக, அய்யப்பனே இந்த வதந்தியை கசிய விட்டிருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…