அரபிக்கடலில் உருவாகியுள்ள பிபர்ஜாய் புயல் இன்று மாலை குஜராத்தில் கரையைக் கடக்கவுள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில் கடலோர மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அரபிக்கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பிபர்ஜாய் புயலானது இன்று பிற்பகலுக்குப் பிறகு குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் கரையை கடக்கும்போது கட்ச், சவுராஷ்டிரா, தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், ஜுனாகர், மோர்பி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், புயல் காற்றின் வேகம் மணிக்கு 135 முதல் 145 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் சார்பில் புயலை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டள்ளன.
அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் வசித்து வந்த 20ஆயிரம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், அரபிக்கடலில் உருவாகியுள்ள பிபர்ஜாய் புயலால் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகளுடன் முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு, மாநில அரசு, இந்திய விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பிபர்ஜாய் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயல் மற்றும் கனமழையால் அதிக சேதம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் இடங்களில் இருந்து கால்நடைகளும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பிபர்ஜாய் புயல் கரையைக் கடக்கும்போது, குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதனால், தேசிய, பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 12 குழுக்கள் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், புயல் கரையைக் கடப்பதால், குஜராத், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, லட்சத்தீவுகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். பிபர்ஜாய் புயல் கரையை கடக்கவுள்ளதையொட்டி, வட மேற்கு ரயில்வே, மேற்கு ரயில்வே மண்டலங்கள் இன்று பல ரயில்களின் சேவைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்துள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…