கரையைக் கடந்தது மாண்டஸ் ஆனால்.... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடந்துள்ளதாகவும், இருப்பினும் வட உள்மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயலானது முழுவதுமாக கரையை கடந்த நிலையில் அதுகுறித்து சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மண்டல அலுவலகத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்துள்ளது என்றும், நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்தது எனத் தெரிவித்தார்.
இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, அதன் பின்னர் மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வட உள்மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும் என்றார். புயல் காரணமாக சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துள்ளது.
குறிப்பாக காட்டுப்பாக்கம் 16 செ.மீ, வில்லிவாக்கம் 6 செ.மீ, புழல் 10 செ.மீ, பூந்தமல்லி 10 செ.மீ, சத்தியபாமா பல்கலைக்கழகம் 7 செ.மீ, பள்ளிக்கரணை 7 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ மழைப்பொழிவு பெய்துள்ளது என்று கூறினார். புயல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 70 முதல் 75 கி.மீ வேகத்தில் காற்று வீசி உள்ளது என்றார். மேலும் வட உள்மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…