மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோயிலில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் செய்தார்.
இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியா சென்றடைந்தார். அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களை, அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார். அப்போது, இந்தியா-மலேசியா இடையேயான இரு தரப்பு உறவுகள் குறித்து அவர்களிடம் அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷனுக்குச் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கிருந்த விவேகானந்தரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இது தொடர்பான அவர் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கோலாலம்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனுக்கு சென்று நாளைத் தொடங்குவது ஆசிர்வதிக்கப்பட்டது.
உலகளாவிய இளைஞர்களின் அடையாளமாக விளங்கும் விவேகானந்தரின் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். 2015ம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்தச் சிலை,மலேசியாவில் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் செழுமையான பாரம்பரியத்திற்குச் சான்று' என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலுக்குச் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு தரிசனம் செய்தார். அமைச்சருக்கு பத்துமலை முருகன் கோயில் குழுத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா மற்றும் இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…