தமிழக அமைச்சரவையின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார்.
2019ம் ஆண்டு திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற எம்.பி. தேர்தலில் உதயநிதி செய்த பிரச்சாரம் மக்களிடையே திமுகவிற்கு பலமாக அமைந்தது. இதனையடுத்து 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதன் முறையாக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட அதிக வாக்குகளைப் பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
மே 11ம் தேதி, 2021ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் கட்சியில் கோரிக்கைகள் எழுந்ததை அடுத்து, தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பதவி வழங்கியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினராக 18 மாதங்கள் பணியாற்றியுள்ள உதயநிதி ஸ்டாலின், இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியுடன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ‘உதயநிதி ஸ்டாலின் எனும் நான்...’ என பதவி ஏற்பு மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியைப் படித்து அமைச்சராக பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மலர்கொத்து கொடுத்தார். மேலும் பதவியேற்பு மேடையிலேயே அப்பா ஸ்டாலினின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தின் இரண்டாவது தளத்தில் நவீன வசதிகளுடன் கூடிய அறையும், அமைச்சருக்கான அரசு வாகனமும் உதயநிதிக்காக தயார் செய்யப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…