தனது கணவரின் மரணம் குறித்து தவறான தகவல்களை ஒளிபரப்ப வேண்டாம் என நடிகை மீனா கேட்டு கொண்டுள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இந்த நிகழ்வு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர் இறப்பிற்கு காரணமாக அவருக்கு ஏற்கனவே நுரையீரல் மற்றும் இருதயம் செயலிழந்துவிட்ட நிலையில் மாற்று உறுப்புகள் எங்கும் கிடைக்காததால் அவரை பிழைக்க வைக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எக்மோ கருவியில் உயிர் வாழ்ந்து வந்த அவர் உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போக சிகிச்சை பலனின்றி ஜூன் 28 அன்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து ஜூன் 29 அன்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு, பெசண்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகை மீனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் எனது கணவர் குறித்து தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என கூறியுள்ளார்.“எனது அன்புக் கணவர் வித்யா சாகரின் இழப்பால் நான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன். அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, இந்தச் சூழலுக்கு அனுதாபம் தெரிவிக்குமாறு நான் மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இந்த விஷயத்தில் தவறான தகவல்களை ஒளிபரப்புவதை நிறுத்துங்கள்.
இந்த இக்கட்டான நேரத்தில், எங்கள் குடும்பத்திற்கு உதவிய மற்றும் துணை நின்ற அந்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களால் இயன்றவரை முயற்சித்த அனைத்து மருத்துவக் குழுவினருக்கும், எங்கள் முதலமைச்சர், சுகாதார அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகங்கள் மற்றும் அன்பையும் பிரார்த்தனைகளையும் அனுப்பிய என் அன்பு ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…