இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற தர்ஹாவில் 849வது ஆண்டாக சந்தனக்கூடு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த மதநல்லிணக்க விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
ஏர்வாடியில் உள்ள மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, இந்த வருடம் 849ம் ஆண்டு திருவிழா கடந்த மே 21-ந்தேதி மவுலீதுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மே மாதம் 31 ம் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக் கொடி யானைமேல் வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை தொடங்கியது. மேளதாளங்கள் முழங்க யானைகள் அணிவகுக்க, வாணவேடிக்கையுடன் நாட்டிய குதிரைகள் நடனமாட அனைத்து சமுதாயத்தினரும் அணிவகுக்க, இன்று அதிகாலை முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு தர்காவிற்கு வந்தடைந்தது.அதைத் தொடர்ந்து, பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார். அதுமட்டுமின்றி, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டனர்.
சந்தனக்கூடு விழாவையொட்டி, ஏர்வாடியில் இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த சந்தனக்கூடு விழாவானது ஜூன் 19-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு நிறைபெறுகிறது. சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஏர்வாடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதோடு, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…