பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழல் செய்ததால் சிறை தண்டனை பெற்றார் என மறைமுகமாக ஆங்கில நாளிதழுக்கான பேட்டியில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அவர் நாவடக்கம் இல்லாமல், கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்காமல் தோழமை உணர்வு இல்லாமல் பேசுவதாக விமர்சித்தார்.
இதற்கு முன்னர் பா.ஜ.க மாநில தலைவர்களாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன், எல் முருகன் உள்ளிட்டோருக்கு தலைமைக்கான தகுதி இருந்ததாகவும், ஆனால் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி போல தன்னை முன்னிலைப்படுத்துவதிலேயே முனைப்பு காட்டுவதாகவும், அவருக்கு தலைமைக்கான தகுதி இல்லை என கடுமையாக சாடினார். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என அதிமுக விரும்புவதாகவும், அண்ணாமலை பேசுவதை பார்க்கும் போது மோடி மீண்டும் பிரதமர் ஆவதை அவர் விரும்பவில்லை என்றே காட்டுவதாக கூறினார்.
20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்துக்குள் பா.ஜ.க நுழைய அதிமுக தான் காரணம் எனவும், தமிழகத்தில் அதிமுகவால் தான் பா.ஜ.கவுக்கு அடையாளம் கிடைத்தது என கூறினார். தொடர்ந்து கூட்டணி தர்மத்தை மீறி செயல்படும் அண்ணாமலையை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டிக்க வேண்டும் என கோரிய அவர், இதே நிலை நீடித்தால் கூட்டணியில் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் வரும் என எச்சரிக்கை விடுத்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…