பணம், செல்வாக்கு போன்றவற்றிற்காக நரபலி என்னும் பெயரில் கொலை செய்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கேரளாவை உழுக்கிய 2 பெண்கள் நரபலி கொடுத்த சம்பவத்தில் இன்னும் முடிவு தெரியாத நிலையில், தற்போது குஜராத்தில் பெற்றோர்களே தனது 14 வயது சிறுமியை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, இரண்டு பெண்களை கடத்தி சென்று நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், மந்திரவாதி பகவந்த் சிங், அவரது மனைவி லைலா, முகமது ஷாபி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இரண்டு பெண்களையும் நரபலி கொடுத்ததுடன் உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்டதாகவும், உடலைத் துண்டு துண்டாக வெட்டி புதைத்ததாகவும் தெரிய வந்தது. போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது போன்று நரபலி சம்பவம் குஜராத்திலும் நடைபெற்றுள்ளது. குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தில் ஒகிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை அவரது பெற்றோர்களே நரபலி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பணம் கொழிக்கும் என்ற நம்பிக்கையால், நவராத்திரியின் போது கடந்த அக்டோபர் 3 ஆம் நாள் பெற்றோர்கள் தங்களது மகளை பலியிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், பண்ணையில் வைத்து நடக்கப்பட்ட இச்சம்பவத்தில், சிறுமி நரபலி கொடுத்ததோடு மீண்டும் உயிர்பித்து வருவாள் என நம்பி நான்கு நாட்களாக உடலை வைத்திருந்ததாகவும், பின்னர் பண்ணையிலேயே வைத்து உடலை தகனம் செய்ததாகவும் தெரிகிறது. இது குறித்து சிறுமியின் தந்தையான பவேஷ் அக்பரியிடம் விசாரணை நடத்தியதில் அவர் முரணாக பதிலளித்ததாகவும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…