ஃப்ரீ ஃபையர் விளையாட்டு முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இளம் தலைமுறையினர்கள் எப்படி அதனை மீண்டும் விளையாட முடியும்? இதற்கு காவல்துறையினரும், சைபர் கிரைமினரும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்று மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது குறித்து வெளிவந்த அறிக்கையில், நாகர்கோவிலைச் சேர்ந்த ஐரின் அமுதா என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், “எனது மகள் இதழ், வில்சன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளதாகவும்” கூறியிருக்கிறார். மேலும், அதில், கடந்த 6-ஆம் தேதி முதல் எனது மகளைக் காணவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
இது குறித்து விசாரித்த போது, அந்தப் பெண் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து Free Fire விளையாட்டு விளையாடி வந்ததாகவும், அதில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக கன்னியாக்குமரியைச் சேர்ந்த ஜாப்ரின் என்பவருடன் சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அதன் படி, அந்த இளம் பெண்ணை ஜாப்ரின் என்பவர் ஆசை வார்த்தை கூறி, அவரது நண்பர்கள் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக, காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எனது மகளை மீட்டு ஆஜர்படுத்த, காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஃப்ரீ ஃபையர் முற்றிலும் தடை செய்யப்பட்ட நிலையில் இளம் தலைமுறையினர் அதனை விளையாடுவது எப்படி என்றும்? காவல்துறை அதிகாரிகளும், சைபர் கிரைம் போலீசாரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்வி எழுப்பி, விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.
ஆன்லைன் கேம்கள் தற்போது விளையாட்டோடு நிறுத்தாமல், இது போன்ற பல்வேறு சர்ச்சைகளை எழுப்புகின்றன. இது போன்ற விளையாட்டுக்களால் இளம் தலைமுறையினர் பெருமளவில் பாதிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…