குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் காவல்துறை அதிகாரிகள் உள்பட 12 பேரை விசாரிக்க தமிழக அரசிடம் சிபிஐ அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோனில் கடந்த 2016 ஆம் ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரூ.250 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் அமைச்சர்களான விஜயபாஸ்கர், ரமணா, டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இவர்கள் பெயர்களுடன் வேறு சில போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால்துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது.
மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரித்துவந்த இந்த வழக்கானது சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சம்மந்தமான 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையாக வைத்து அவர்களை நேரில் அழைத்து விசாரணையும் நடத்தினர்.
அதன் பின்னர், குட்கா வியாபாரி மாதவராவ், பங்குதாரர்கள் குமார் சங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த 369 கோடி ரூபாயை வைத்து வெளிமாநிலங்களில் வாங்கிய 246 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன.
பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த குட்கா வழக்கு சிபிஐ சார்பில் மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா, சென்னை காவல் ஆணையர்களாக இருந்து ஓய்வுபெற்ற டி. ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி வேண்டி தலைமை செயலர் இறையன்புவிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்தால் முன்னாள் அமைச்சர் உட்பட அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…