ஒடிசா மாநிலத்தில் கடந்த மாதம் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்துக்கு மனித தவறே காரணம் என விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் என்ற இடத்தில் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி இரவு மேற்குவங்க மாநிலம் சாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அப்போது அருகிலுள்ள தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மீதும் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் விழுந்தன. இந்த கோர விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நாட்டின் மிகப் பெரிய விபத்துகளில் ஒன்றாக பதிவாகியுள்ள இந்த ஒடிசா ரயில் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு பிரிவு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் அறிக்கை கடந்த வாரம் ரயில்வே அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, ஒடிசா ரயில் விபத்துக்கு மனித தவறே காரணம் என்று அந்த விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிக்னல் மாற்றம் செய்வதில் நடந்தது என்ன? என்பது குறித்து அதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும், சரியான பாதையில் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், திடீரென சரக்கு ரயில் வந்த பாதையில் சென்றதற்கான காரணமும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்னல் மாற்றத்தை கவனித்திருந்தால், இந்த பெரிய விபத்தை தவிர்த்திருக்கலாம் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக ஸ்டேசன் மாஸ்டரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அந்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்குமோ? என எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இந்த அறிக்கையில் எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக வேறொரு குழுவினர் தீவிர விசாரணை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…